Monday, January 10, 2011

... தாகம்! ...



கேப்பைகம்பு கூழுண்டு தென்னையிள நீருண்டு
பனைதரும் பதனியுண்டு எளியநீர் மோருண்டு
பக்கவிளைவு ஏதுமன்றி தாகமது தணிப்பதுண்டு
பிறகேன் 'கோக்' உனக்கு.

ண்ணாடிக்குள் அடைவதில்லை குளிர்பெட்டியில் வசிப்பதில்லை
நடிகர் எவரும்வந்து பரிந்துரை செய்வதில்லை
உள்ளம் அதிகம்கேட்கும் விளம்பரம் ஏதுமில்லை
ஆனாலும் இளநீர் இதம்.

தொட்டாலே குளிரும் குடுவைக்குள் குடியிருக்கும்
வாயுடைத்து திறக்க வாயுவுடன் பொங்கிவரும்
கையில் இருந்தாலே பெருமை பிரதிபலிக்கும்
பட்டால்தான் தெரியும் வலி.

திறந்தவெளி விற்பனையில் சுகாதாரமில்லை என்பர்
சீவிவிற்பவன் குளித்தானோ இல்லையோ என்பர்
அவர்கள்வாங்க காத்திருக்கிறது, என்றோ ஒருநாள்
பாட்டிலில் அடைத்த பானம்.

செயற்கை குளிரூட்டல் கூடவே காற்றடைப்பு
உடலில் விரும்பி சேர்க்கும் வேதிப்பொருள்
விலைக்கு இனிப்புநீர் - இத்தனையும் நிறுத்தும்வரை
தீராமல் தொடரும் தாகம் !.


2003

No comments: