Sunday, May 1, 2011

பஞ்ச் -5

பாபா மரணத்திற்கு காரணம் "வாஸ்து" சரியில்லையென வாதிட்டான் நண்பன். # புரிந்துகொண்டேன், எனக்கு "தோஸ்து" சரியில்ல..!


கனவு தேசம் !

ஐந்து நட்சத்திர ஆணவத்தில்
எட்டுமாடியோடு நிமிர்ந்துநிற்கும் கட்டிடத்தில்
பிறந்தநாள் விழாவை எளிமையாக
பத்துலட்ச செலவில் மட்டும் கொண்டாடியபின்
வந்திருந்த பிரபலங்களுடன்
வலிக்காமல்கை குலுக்கிவிட்டு திரும்புகையில்
ஆடையில் மட்டும் ஏழ்மைகாட்டி
நெருங்கிவரும் மேல்தட்டு
நங்கையர் சிலர்
இவனைப்பார்த்து உதட்டுச் சிவப்பை
இன்னும் விரிக்க
அலட்சிய புன்னகை உதிர்த்துவிட்டு
இறக்குமதி சிகெரெட்டை
வாயில் பொருத்தி லைட்டர் தேட
ஓடிவந்து பற்ற வைக்கும்
ஓட்டல் முதலாளி..
நெப்போலியனின் தலையை உடைத்து
கவிழ்த்துக்கொண்டு எச்சில் பண்ணி
அசிரத்தையாய் மீதம் வைத்து
தேர்ந்தெடுத்த தேவதைகள் நால்வரோடு
பின்னிக்கொண்டு வெளியில் வந்து
பின்னிருக்கை முழுதும் காலியாயிருக்க
முன்னிருக்கையில் நெருக்கியமரும் அந்த
சிற்றாடை சிற்றிடைகளுடன் சிரித்துக்கொண்டு
கதவு திறந்துவிட்ட காவலனுக்கு
ஆயிரம் மதிப்புள்ள காந்திநோட்டை
அலட்சிய டிப்சாக அளித்துவிட்டு
மேட் இன் ஜப்பானை ஸ்டார்ட் செய்ய
கிளம்பாமல் பல்லிளிக்குமதன் தயாரிப்பாளனை
ஆங்கிலக் கெட்ட வார்த்தையில்
அர்ச்சனை செய்து தரையிறங்கி
கோபத்தில் காரை ஓங்கி உதைக்க...
.... .... .... .... ....
.... .... .... .... ....
'அய்யோ' என்ற அலறல் கேட்டு
பிளாட்பார இடைஞ்சலிலிருந்து
பதறி விழித்துக்கொண்டான்
படுத்திருந்த பிச்சைக்காரன்.


~ 2008 ~

Saturday, March 19, 2011


பஞ்ச்-4


ஸ்ரீரங்கம், திருவாரூருனு அல்லாரும் அவுக சொந்த ஊர்ல நிக்கிறாங்கோ.. அதுனால நானும் சொந்த ஊருல நிக்கப்போறேன்
எலெக்சன் அன்னிக்கு.. ஓட்டு போட..!


Monday, March 7, 2011

இல்லம் !


ந்திரனில் வாழலாம்
ஆக்ஸிஜன் இல்லை யென்கிறார்கள்

செவ்வாய்க்குப் போகலாமென்றால்
தண்ணீரின் தடமே இல்லை அங்கு.

அமெரிக்கா வாசத்தில்
பின்லேடன் பயம் உண்டு.

சரி, சீனாவோ ஜப்பானோ
இடம்மாறி விடலா மென்றால்
எது மனிதன் எது எந்திரம்
அடையாளம் தெரியாது, வேண்டாம்

இலங்கையில் இருக்கும் எண்ணமிருந்தால்
இப்பொழுதே கைவிடு
மண்ணின் மைந்தர்களுக்கே
அங்கே இடமில்லையாம்

என்ன சொன்னாய்..?
பாகிஸ்தான் போகலாமா.....?
வாழும்போதே நரகம் காணும்
உத்தேசம் இல்லை எனக்கு.

வேறெங்கு வசிக்க…?

**@**

மும்பைக்கோ டெல்லிக்கோ
மொத்தமாய் போய்விடலாம்தான்,
பாவம் அவர்களுக்கு தமிழ் தெரியாதாம்

ஓட்டலில் அறையெடுத்து
வாழ்நாள் முழுதும்
வசதியாக வாழலாமென்றால்….,

காரமே இல்லாமலும்
உப்பை அள்ளி கொட்டியும்
நீ வைக்கும் குழம்புக்கு
அங்கே எந்த உணவும் ஈடாகாது.

தலைக்கு மேலும் சொந்தமில்லை
காலுக்கு கீழும் உரிமையில்லை
அந்தரத்தில் வாழும் வாழ்க்கை
அபார்ட்மென்ட்ஸ் வேண்டாம் நமக்கு

எங்குதான் வாழ...?!

**@**

ணியடிக்க அனுமதி கேட்டு
தண்ணீர் வரக் காத்திருந்து
கடன் வாங்கி வெள்ளையடித்து
கால் நீட்டவும் இடமின்றி….

இருக்கின்ற வாடகை வீட்டிலேயே
பெருச்சாளித் தொல்லையோடு
பெருவாழ்வு வாழ்ந்திடுவோம்

என் சம்பளம் இவ்வளவுதான்
அதற்குள்ளே வாழலாம் வாடி...!

~2008~
பஞ்ச் - 3

முழுசா ரெண்டு வருஷம் கூட ஆகல..,
60-க்கும் 63-க்கும் அடிச்சிகிட்டு பிரியறீங்க..
இதுக்குதானாடா இலங்கைல அத்தன பேர கொன்னீங்க..? !

அழகு !


ஆப்பிள் கன்னம்
கூர் நாசி
மான் விழி
தேன் மொழி
அத்தனையும் கோரமாகிறது
குருட்டு பிச்சைக்காரனுக்கு மறுத்து
நீ
"கோக்" வாங்கிய பணத்தில்.



~2002~

Wednesday, March 2, 2011

பஞ்ச் - 2

தமிழக மக்கள் இனி..,
கைமாற்று கடனை உடனே அடைக்கலாம்....
அடகில் இருக்கும் பொருளை மீட்கலாம்....
பிரிட்ஜ் - வாஷிங் மெஷின் வாங்கி போடலாம்...
அனைத்துக்கும் மேலாக,
குடிமகன்கள் டாஸ்மாக் வருமானத்தை உயர்த்த உதவலாம்...!
# செய்தி: தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது.

Sunday, February 27, 2011

வேலையில்லா திண்டாட்டம் !


பத்து மணி அலாரத்தில் கண்விழி
சூரியன்மேல் கோபம் கொள்
பல் துலக்காமல் காபி குடி
காயத்துடன் ஷேவிங் முடி
துண்டெடுக்காமல் குளிக்க போ
இரண்டு குவளை நீரில்
இரண்டு மணிநேரம் குளி
தந்தையின் பார்வை படாமல்
உணவு கொள்
காசு கேட்டு தாயை
தொந்தரவு செய்
தண்டசோறு திட்டு பெறு
ரோஷம் வந்து வெளியேறு
நண்பர்களுடன் அரட்டை அடி
கோவில் சுவற்றில் கூட்டமாய் உட்கார்
தாவணிகள் விமர்சனம் செய்
செருப்பெடுத்தால் திரும்பிக் கொள்
மதியம் தூங்கு
நூலகம் தாண்டி தியேட்டர் செல்
மாலை நேர சினிமாவில்
மதி மயங்கு
களைத்துப் போய் வீடு திரும்பு
இரவு வரை டி.வி. பார்
நள்ளிரவில் உறங்கப் போ

அதிர்ஷ்டம் இல்லையென
அடித்துச் சொல்.

Friday, February 11, 2011

வெற்றி யாருக்கு?


மசூதிகள் இடிப்பர்
இராமருக்காக வென்பர்

கோயில்களில் குண்டு வைப்பர்
அல்லா வென்றா ரென்பர்

பாதிரியார்களை கொளுத்திடுவர்
பகவான்தான் சொன்ன ரென்பர்

யோசித்திருக்கிறீர்களா ..?!

இதில் லாபமும் வெற்றியும்
கடவுள்களுக்கோ மதங்களுக்கோ இல்லை..

திரியைக் கொளுத்திபோட்ட
திருடர்களுக்குத் தான் என்பதை ..!

Monday, February 7, 2011

பஞ்ச் - 1

ஸ்பெக்ட்ரம்
ஆரிய திராவிட சண்டை என்றார்..
ஆரும் தனியாக செய்யமுடியா தென்றார்..
கைதானாலும் கயவனல்ல என்கிறார்..

நல்லா சொல்றாருய்யா டீடெய்லு !!

Monday, January 31, 2011

தீராக் கடன் !

என் பிறப்பின் ரகசியமே !

தன் படைப்பை ரசித்திட
குனிந்து குனிந்தே
விழுந்த கூனே !

எனக்கு நடை பழக்கிட
வளைந்த முதுகே!

என் சிரிப்பிற்கு
ஓயாது சம்பாதித்து
தள்ளாடும் கால்களே !

தீண்ட நினைத்து
நீண்ட கைகளின் நடுக்கமே!

இருமி இருமி
காலனை விரட்டும்
கடைசி முயற்சியே!

தன்பிள்ளை நம்பாது
கைத்தடி நம்பி
அங்குலம் அங்குலமாய்
நகர்கின்ற காலமே!

எனைப் போர்த்திய தோலின் சுருக்கமே....!
என் எதிர்கால உருவே...!

உன்னிடம் நான் பட்ட நன்றிக்கடன்
அடைப்பது எப்போது,
நீ எனக்கு செய்ததை
நானென் பிள்ளைக்கு செய்திட
ஓடுகிற வாழ்க்கையில்...!

~2004~

நீயன்றி....!





காத்திருப்பின் நொடிமுள்ளில்
காலிடறி வீழ்ந்ததுவும்

சுவாச இடைவெளியின்
நீளங்கள் அளந்ததுவும்

காரியக் கவனத்தில்
மறதியை நுழைத்ததுவும்

சினத்தில் சுற்றமிருக்க - எனை
சிரிக்க வைத்ததுவும்

தாய்மொழி பயன்பாட்டில்
பிழைகள் இழைத்ததுவும்

ஊரே களித்திருக்க
தனிமைக்கு அழைத்ததுவும்

அக்றிணைகள் அனைத்துடனும்
உரையாட உந்தியதும்

அப்பாவி பெயரொழித்து
அடப்பாவி அளித்ததுவும்

புவியீர்ப்பு விசைமீறி
மிதக்க விட்டதுவும்

நின் நினைவன்றி நினைவன்றி
நிச்சயமாய் வேறென்ன..?

~2008~

Sunday, January 23, 2011

...அனுமதி இலவசம் !...


பூட்டிதான் இருக்கும்
புன்னகையால் திற

பெரிகார்டியம் மெல்லியது
கிழித்து உள்ளே வா

தமனியில் தங்கு
சிரையில் சிறைபடு

அறைகள் நான்கு உண்டு
வசதியாக வாழ்

வெண்ட்ரிக்கிளில் விளையாடு
ஆரிக்கிளில் இளைப்பாறு

உள்ளே வரும் குருதியில்
நீ குளித்து
அதை சுத்தமாக்கி வெளியேற்று

உட்சுவரில் சாய்ந்து கொள்
உயிர் வாழ உதவு

வாடுமென் உயிருக்கு
வசந்தம் வரவழை

சுருங்கி விரியும் - அதையுன்
சுவாசத்தால் சுத்திகரி

லப்டப் சத்தத்தை
லாவகமாய் சங்கீதமாக்கு

அன்பின் சின்னம்
அழியாமல் காப்பாற்று

நோய்வந்து தாக்குமுன்னே
நீவந்து தாக்கு

புதிதாய் குடிபுகுந்து
புத்துணர்ச்சி பரப்பு

விரைந்து வா
வெற்றிடம் நிரப்பு

உனக்காக காத்திருக்கிறது
என் இதயம்.

~2002

Monday, January 10, 2011

... தாகம்! ...



கேப்பைகம்பு கூழுண்டு தென்னையிள நீருண்டு
பனைதரும் பதனியுண்டு எளியநீர் மோருண்டு
பக்கவிளைவு ஏதுமன்றி தாகமது தணிப்பதுண்டு
பிறகேன் 'கோக்' உனக்கு.

ண்ணாடிக்குள் அடைவதில்லை குளிர்பெட்டியில் வசிப்பதில்லை
நடிகர் எவரும்வந்து பரிந்துரை செய்வதில்லை
உள்ளம் அதிகம்கேட்கும் விளம்பரம் ஏதுமில்லை
ஆனாலும் இளநீர் இதம்.

தொட்டாலே குளிரும் குடுவைக்குள் குடியிருக்கும்
வாயுடைத்து திறக்க வாயுவுடன் பொங்கிவரும்
கையில் இருந்தாலே பெருமை பிரதிபலிக்கும்
பட்டால்தான் தெரியும் வலி.

திறந்தவெளி விற்பனையில் சுகாதாரமில்லை என்பர்
சீவிவிற்பவன் குளித்தானோ இல்லையோ என்பர்
அவர்கள்வாங்க காத்திருக்கிறது, என்றோ ஒருநாள்
பாட்டிலில் அடைத்த பானம்.

செயற்கை குளிரூட்டல் கூடவே காற்றடைப்பு
உடலில் விரும்பி சேர்க்கும் வேதிப்பொருள்
விலைக்கு இனிப்புநீர் - இத்தனையும் நிறுத்தும்வரை
தீராமல் தொடரும் தாகம் !.


2003

புதுக்கவிதை கற்றுக்கொள் !



கற்பனையில் மித
மகாகவியாய் எண்ணிக் கொள்
கண்வலிக்க கனவு காண்
ராசியான பேனா திற
அழகாய் எழுத யோசி
யோசித்து யோசித்து ஓய்ந்து போ
மொழிக்கடலில் வார்த்தை தேடு
திக்கித் திக்கி வார்த்தைகள் சேர்
காத்திருந்து களைத்துப் போ
உவமையோடு முட்டி மோது
கலித்தொகை கலந்து பார்
விருத்தங்கள் விசாரி
சிலேடைகள் சிந்தனை செய்
இலக்கணம் உணர்
எதுகை மோனை அமைத்து பார்
எழுதி எழுதி அடி
தலைமுடி பிய்த்துக்கொள்
ஒருவரி எழுதி
மறுவரி முயன்று பார்
இரண்டையும் அழித்து விட்டு
மூன்றாவதாய் யோசி
களைத்துப் போய் மேஜைமேல்
கவிழ்ந் துறங்கு
நடுஇரவில் பதறி யெழு
நிலவுடன் சிநேகம் கொள்
வார்த்தையோடு மீண்டும் போர்துவங்கு
தாடியிருப்பின் சொரிந்து கொள்
காகிதங்கள் கசக்கி யெறி
பேனா முனை உடை..
ஒருவரியேனும் கவிதை எழுது.

~௨00௨~